திருச்சி: முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி: முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது.
முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆக.31 வரை 139.9 அடியாக தொடர்ந்து பராமரித்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை செப். 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.